Friday 19 May 2017

சிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது ?


சிவன் கழுத்தில் பாம்பு ஏன் வந்தது ?



பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. பாலூட்டி வளர்த்தாலும் பாம்பு தீண்டத்தான் செய்யும் என்பார்கள். பாம்புகளை செல்ல பிராணியாக யாரும் வளர்ப்பதில்லை. பாம்புகள் வலையில் உள்ள எலிகளை பிடித்து உண்பதால் விவசாயிகளின் நண்பன் என்பார்கள். இத்தகைய குணங்களை கொண்ட பாம்பு ஏன் சிவனின் கழுத்தில் வந்தது. இந்த கேள்விக்கான விடை தேடினேன்.

இந்த கேள்வியோடு சிவன் தன் உருவம் முழுவதிற்குமான விளக்கத்தை எனக்கு அளித்து என் மனதினுள் புகுந்து விட்டான். ஓம் நமசிவாய. சிவன் திருவடி வாழ்க.
#சிவன் திருஉருவ தத்துவங்கள்:
இறைவனுக்கு உருவம் இருக்கிறதா ? இல்லையா ? இதை பற்றிய சிந்தனைகளும் ஆய்வுகளும் பல்லாயிரம் செய்துவிட்டனர். அந்த இறைவனே அதை நமக்கும் உணர்த்திவிட்டான்.

சிவபெருமானுடைய வடிவம் மூன்று. அருவம், அருவுருவம், உருவம் என்னும் மூன்றுமாம். அருவத் திருமேனியையுடைய பொழுது சிவன் எனவும், அருவுருவத் திருமேனியையுடைய பொழுது சதாசிவன் எனவும், உருவத் திருமேனியையுடைய பொழுது மகேசுவரன் எனவும் பெயர் பெறுவர்.
மகேசுவரன் 25 வடிவங்களில் அருள்புரிகிறான். மேலும், சரபேஸ்வரர், பைரவர், திரிபாதமூர்த்தி என்று பல்வேறு மூர்த்திகளாகவும் ஆகிறான்.
சுந்தரர் திருமழபாடியில் பாடியருளிய தேவாரப் பாடல் வரி ஒன்றைக் காண்போம்.
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

இனி சிவனின் உருவமாக நாம் பொதுவாக காணும் உருவத்தை காண்போம். பத்மாசனம். அந்த சிவனே பத்மாசன நிலையில் அமர்ந்திருப்பாத காண்கிறோம். அவனின் ஒளி மிகுந்த கண்கள் முக்கால் பாகம் மூடிய நிலையில். இரு புருவங்களுக்கும் நடுவில் நெற்றிக்கண். நெற்றியில் திருநீற்றினால் மூன்று கோடுகள். செம்மை நிற சடைமுடியான். அவன் தலையில் கங்கை ஆறாக பெருக்கெடுத்து ஓடுகிறாள். பிறையை தலையில் சூடிய பெருமானாய் இருக்கிறான். சிவனுக்கு பிடித்த கொன்றை மலரை தலையில் அணிந்திருக்கிறான். உடல் முழுவதும் திருநீற்று கோடுகள்.
கைகளிலும் கழுத்திலும் உருத்திராட்ச மாலை. கழுத்தில் பாம்பு. உடுக்கையும் சூலாயுதத்தையும் வைத்திருக்கிறான். விடையாகிய காளை மாட்டை வாகனமாக வைத்துள்ளான். புலித்தோலை இடையில் அணிந்துள்ளான். கைலாய மலையை வீடாக வைத்துள்ளான். நடனத்தை உருவாக்கியவனாய் நடராசனாய் இருக்கிறான். இப் பிரபஞ்ச அதிர்வுகள் யாவையும் கடந்த சலனமில்லாத முகபாவனையோடு நமக்கு காட்சி தருகிறான். இன்னும் இன்னும் நமக்கு புலப்படாத எவ்வளவோ தத்துவங்களை அடக்கியவனாய் நமக்கு வேண்டும் வரங்களை அள்ளித்தந்து அருள் புரிகிறான்.
#நெற்றிக்கண்:
நமது இரண்டு கண்களுக்கும், மூக்கின் மேல் சுழி முனைக்கும், புருவங்களின் இடைநடுவே, சிறு ஊசித்துவாரத்தில் பத்தில் ஒரு பாக அளவில் மிக நுட்பமாக இருக்கும் துவாரத்திற்கு "நெற்றிக்கண்" என்று பெயர். இதை மிக இலேசாக சவ்வு மூடிக்கொண்டிருக்கிறது.

குண்டலினி சக்தியை மேலே எழுப்பி தலையின் நடு உச்சி பகுதிக்கு கொண்டு வரும் போது அளப்பரிய ஞானம் தோன்றும். அப்போது நெற்றிக் கண்ணும் திறக்கும். நெற்றிக் கண்ணினால் பல விடயங்களை உணர முடியும். நெற்றிக் கண் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். நெற்றிக்கண் ஞானத்தின் உச்சத்தை குறிக்கும்.
#உடுக்கை:
உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலியை ஒலிக்கிறது. உடுக்கையை அடிக்கும் போது ஓம் என்ற பிரணவ மந்திர ஒலி பிறக்கிறது. இந்த நாத ஒலி பிரபஞ்ச ஆக்கத்தின் பிறப்பிடம். பிரபஞ்ச படைப்பை ஆக்கும் ஆனந்த தாண்டவத்தை தொடங்கும் முன்னர் சிவன், உடுக்கையை 14 முறை அடிக்கிறார். இது பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையான சாத்திரத்தை உருவாக்குகிறது. இவ்வாறு பிரபஞ்ச இயக்கத்துக்கு தேவையானவற்றை உருவாக்கிய பின்னர் சிவன், ஆனந்த தாண்டவத்தை தொடங்குகிறார். ஆகவே, உடுக்கை பிரபஞ்ச படைப்பின் ஒலிக்குறிப்பாகும்.

#பிறை சந்திரன்:
பிறை சந்திரன் வளரும், தேயும் குணமுடையது. காலச் சக்கரத்தில் இந்த வளர்தலும் தேய்தலும் மாறி மாறி நிகழ்ந்து கொண்டே இருக்கும். காலத்தை நாம் இரவு பகல் என்று உணர்ந்தாலும், தினமும் நிகழும் கால மாற்றம் சந்திரன் மூலம் நம் கண் முன்னே காலம் நகர்ந்து செல்வதை எளிதாக உணர்த்துகிறது. இந்த பிரஞ்சத்தையே படைத்த இறைவன், காலத்தை வென்றவனாவான். இந்த தத்துவத்தையே பிறை சந்திரன் உணர்த்துகிறது.

#நெற்றியில் மூன்று திருநீற்று கோடுகள்:
இவ்வுலகில் பிறந்து உயிரினங்கள் யாவும் இறுதியில் தீயில் வெந்து சாம்பலாகும் தத்துவத்தை தாங்கியுள்ளது திருநீறு.

காராம் பசுவின் சாணம் மருத்துவ குணம் மிக்கதாகத் திகழ்கிறது. இந்த சாணத்தை நிலத்தில் படாமல், அருகம்புல்லின் மேல் விழ வைத்து, அந்த அருகம்புல்லுடன் அதனை தீயிலிட்டு திருநீறு போல் ஆக்கி, அதனை பூசி வந்தால் தீராத நோயும் தீரும் என மருத்துவ நூல்கள் கூறுகின்றன.
திருநீறு உடலில் உள்ள நீர்த்தன்மையை உறிஞ்சவல்லது. நம்மை சுற்றியுள்ள அதிர்வலைகளில் நமக்கு நன்மை பயக்ககூடிய நல்ல அதிர்வலைகளை மட்டுமே உள்வாங்கும் தன்மையுடையது.
திருநீற்றை முக்குறியாக அணிகிறோம். ஏனென்றால் ஆணவம், கன்மம், மாயை என்ற மூன்று மலங்களை வேரோடு நீக்கினால் தான் நாம் முக்திக்கு தகுதி உடையவர் ஆகிறோம் என்பதை அக்குறி உணர்த்துகிறது.
திருநீறு இன்னும் பற்பல நன்மைகளை நமக்கு அருள்கிறது.
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்திலுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கள் திருஆலவாயான் திருநீறே

என்பது திருஞானசம்பந்தர் திருநீற்றுப்பதிக வாக்கு.
#சூலாயுதம்:
மூன்று முனைகளை கொண்ட சூலாயுதம், சிவனின் இச்சா, கிரியா மற்றும் ஞான சக்தியை குறிக்கிறது. இச்சையினால் படைத்தலும், கிரியையால் காத்தலும் ஞானத்தினால் நன்மை பெறுதலும் ஆகும். இந்த ஆயுதம் வல்வினைகளை அழித்து நன்மை பயப்பவை.

#கொன்றை மலர்:
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, கோடையின் துவக்கத்தில் மலரக் கூடியது கொன்றை மலர்கள். இதற்கு சொர்ணபுஷ்பம் என்ற மற்றொரு பெயருமுண்டு. சரக்கொன்றை, சிறுகொன்றை, செங்கொன்றை, மஞ்சள்கொன்றை, மைக்கொன்றை, மயில்கொன்றை, புலிநககொன்றை, பெருங்கொன்றை என பல வகையாக இருக்கும் கொன்றை, தமிழகத்தைப் பொறுத்தவரை காடும் காடு சார்ந்த பகுதியான முல்லை பகுதிக்கு உரிய மரம்.

மருத்துவ குணத்திலும் கொன்றை மரம் ஈடு இணையற்றது. சரக்கொன்றை சிறந்த நோய்க்கொல்லியாகிறது. கண் நோய்கள், மலச்சிக்கல், தோல் நோய்கள், சர்க்கரை நோய், சளி என்று பல்வேறு நோய்களை கட்டுபடுத்த பயன்படுகிறது. சிவன் கொன்றை மலர் தரித்தவனாக காட்சி தருகிறான்.
#புலித்தோல்:
புலி மிகுந்த ஊக்கமுடைய விலங்காகும். புலித்தோல் இயற்கையின் சக்தியைக் குறிக்கிறது. இது உலகின் ஆக்க சக்திகளுக்கு மூலமாகவும் இருக்கிறது. சிவன் புலித்தோலின் மேல் அமர்ந்திருப்பது, அவன் எல்லா சக்திகளுக்கும் அப்பாற்பட்டவர் என்பதை உணர்த்துகிறது.

#உருத்திராக்க மாலை:
உருத்திராக்கம் என்பது இமய மலையில் உண்டாகும் ஓர் மரத்தின் விதையாகும். இந்த உருத்திராக்கத்திற்கு மனித உடலில் ஏற்படும் பலவித நோய்களை நீக்கும் தன்மை இருக்கிறது. உருத்திராக்கம் மனித உடலின் அதிக வெப்பத்தை உறிஞ்சக்கூடியது. மனித உடலில் வெப்பம் அதிகரிக்கும் போது வயிற்றிலும் வாயிலும் புண் உருவாகிறது. பஞ்ச பூதங்களின் வெவ்வேறு விகித சேர்க்கையே நவகிரகங்களாகும். இந்த நவகிரகங்களினால் உண்டாகும் பாதிப்புகளை குறைக்க உருத்திராக்கம் பெரிதும் உதவுகிறது.

#பாயும் கங்கை:
கங்கை நதி வளமையும் செல்வ செழிப்பையும் அளிக்க வல்லது. மானுட நல்வாழ்வுக்கு நல்ல ஞானம் மிக அவசியம். கிடைத்தற்கரிய இந்த ஞானம் காலத்தின் மாற்றத்தில் நலிந்துவிடாமல் தலைமுறை தலைமுறையாக ஊடுருவிச் செல்வது அவசியம். இந்த ஞானம் தலைமுறை கடந்து செல்வதையே கங்கை நதி உருவகிக்கிறது. இந்த ஞானம் எல்லா உயிரினங்களுக்கும் நல்வாழ்வையும் அமைதியையும் கொடுத்து கொண்டே இருக்கும்.
தோடு

#சிவனின் இரண்டு காதுகளிலும் வளைந்த காதணிகள். வலது காதில் பாம்பு வடிவ வளையம். இடது காதில் கனிவாய் குழையும் தோடு வளையம். சிவன் உமையொரு பாகனாவான். உமையம்மையை தன்னுள் ஒரு பாகமாக கொண்டவன். பெண்கள் அணியும் தோடை அணிந்த இவனது இடது காது, இந்த தத்துவத்தை உணர்த்திக்கொண்டேயிருக்கும்.
#காளை (விடை) வாகனம்:
நந்தி தேவர். நந்தி என்ற சொல்லுக்கு எப்பொதும் ஆனந்த நிலையில் இருப்பவர் என்று பொருள். இளமையும் திட்பமும் வாய்ந்தவராக நந்தி தேவர் கருதப்படுகின்றார்.
செம்பொருள் ஆகமத்திறம் தெரிந்து
நம் பவமறுத்த நந்திவானவர்

எனும் செய்யுளிலிருந்து சிவாகமத்தை சிவபெருமானிடமிருந்து நேரடியாகத் தெளிந்து உலகத்தவர்களுக்கு அருளியவர் நந்தி தேவரே என்பது தெளிவாகின்றது. நந்தி தேவர் சிவபெருமானிடம் நேரடியாகப் பெற்ற உபதேசத்தை இவரிடமிருந்து சனற்குமாரரும், சனற்குமாரரிடமிருந்து சத்தியஞான தரிசினிகளும், சத்தியஞான தரிசினிகளிடமிருந்து பரஞ்சோதியாரும், பரஞ்சோதியாரிடமிருந்து மெய்கண்டாரும் பெற்றனர்.
நந்தி வெண்மையாகிய தூய்மையும் ஆண்மையும் நிறைந்தது. இது தர்மத்தை குறிக்கிறது. தர்மமே இறைவனை தாங்கி நிற்கிறது. சிவபெருமானின் ஆணைக்கேற்ப கலியுகத்தில் ஒரு காலை மட்டும் தூக்கி நிற்கும். நந்தி சிவனிடம் பெற்ற வரத்திற்கேற்ப எல்லா கோவில்களிலும் சிவன் முன்னே அவரை நோக்கியபடியே இருக்கும். ஆன்மாக்களாகிய நாம் நம் கவனத்தை நந்தியைப் போல எப்போதுமே இறைவன் மீதே நோக்கியிருக்க வேண்டும்.
.

#கழுத்தில் பாம்பு:
பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும். பாம்மை செல்ல பிராணியாக வளர்க்க முடியாது. என்னதான் பால் ஊற்றி வளர்த்தாலும், சமயங்களில் வளர்த்தவனையே கடித்து விடும். விளை நிலங்களில் பயிர்களை நாசமாக்கும் எலிகளை பிடித்து உண்பதால் விவசாயிகளின் தோழனாகும். இவ்வாறு பல்வேறு குணமுடைய பாம்பு போன்ற விலங்களின் மீது இறைவனுக்கு முழுமையான கட்டுப்பாடு இருப்பதை உணர்த்துகிறது.

#இன்னுமொரு முக்கியமான தத்துவம்: மூலாதாரத்தில் இருக்கும் குண்டலினி சக்தி ஒரு அசைவற்ற பாம்பைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சக்தியை எழுப்பி முதுகுத்தண்டின் வழியே பின்னந் தலையில் இருக்கும் சிவத்தோடு (மூளையின் பின்புறம்) சேரும் போது அளப்பரிய ஞானம் உண்டாகும். ஒருவனுக்கு எட்டு சித்திகளும் கிடைக்கும். குண்டலினி சக்தியை எழுப்புபவர்களுக்கு அது ஒரு பாம்பு போல் வளைந்து நெளிந்து ஊர்ந்து செல்வதை உணர முடியும். அடியேனுக்கு இந்த குண்டலினி சக்தி ஒரு முறை எழுந்துள்ளது.
அது எழும் போதே மிகுந்த குளிர்ச்சியோடு அளப்பரிய இன்பம் தோன்றியது. எழும்பி சிறிது தூரம் ஏறியவுடன் இறங்கிவிட்டது. இதை தலைக்கு ஏற்றினால் எப்படி இருக்கும் என்பதை நினைக்கவே வியப்பாக இருக்கிறது. இந்த குண்டலினியை மூச்சுப் பயிற்சியின் மூலம் எழுப்பலாம். இது பற்றி திருமந்திரம் விரிவாக எடுத்துரைக்கிறது. ஒரு குருவின் வழிகாட்டுதலின் படி இதை முயற்சி செய்வதே சிறந்தது. தீவிர பக்தி இருந்தாலும் இந்த குண்டலினி சக்தி எழுமாம். அடியேன் கண்களை மூடி தீர்க்கமாக 108 சரணம் சொல்லிக் கொண்டிருக்கும் போது இந்த குண்டலினி சக்தி எழுந்தது. இந்த தத்துவத்தை விளக்கவே குண்டலினி சக்தியாகிய பாம்பை தன் கழுத்தில் அணிந்திருப்பது தெளிவு.
தோடுடைய செவியன் விடையேறி ஓர் தூவெண் மதிசூடி
காடுடைய சுடலைப் பொடி பூசி என் உள்ளம் கவர் கள்வன்
ஏடுடைய மலரான் உனை நாட்பணிந்தேத்த அருள் செய்த
பீடுடைய பிரம்மாபுரம் மேவிய பெம்மான் இவனன்றே


நன்றி
ஸ்ரீ குமார் ஜோதிடம்

"Jothida Ratna" Dr.SRI KUMAR
kamalee Illam, 133/10, Near Iyya Kovil,
Very Near Vivekananda School,
Manali New town, Chennai – 600 103, Tamil Nadu,
Cell No: +91 996-208-1424, 893-950-5645.
Email ID :nonenantha@gmail.com
Email ID :kamaleesrikumar@gmail.com

No comments:

Post a Comment